Tuesday 14 October 2014

13.) உறையும் உயிர்கள்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

          'எனது பதிவுகள், எனக்கு என்ன பலனைக் கொடுத்தது' என என்னைச் சுற்றியுள்ள பலரும் வினவினர். அவர்களுக்கு எனது ஒரே பதில், "நான் இதுவரை பெற்ற அத்தனை பலனையும் கொடுத்தாலும் கூட கிடைக்காத நண்பர்களை எனக்குக் கொடுத்தது". கடந்த வாரம் கூட ஒரு புதிய நண்பர், திரு.பழனிகுமார் என்பவர் என்னைத் தொடர்புகொண்டு, தனது நட்பை உறுதி செய்தார். மேலும், எனது முதல் பதிவில் குறிப்பிட்ட, திரு.ராஜ் சிவா அவர்கள் என்னை, தனது முகநூல் நண்பராக ஏற்றுக் கொண்டார். உண்மையில் இதுபோன்ற நல்லோர்களின் கூட்டணி, எதிர்காலத்தில் உருப்படியாக ஏதேனும் சாதிக்க நிச்சயம் உதவும்; அதுவரை எங்கள் அனைவரின் தேடல்களும் தொடரும், என்று தெரிவித்துக்கொண்டு, இன்றைய பதிவை தொடர்வோம்.

         கடந்த பதிவில் நம்மைப் போன்ற உயிர்களின் மூல-வித்து விண்வெளியிலிருந்து உறைய வைத்து அல்லது பதப்படுத்தப்பட்டு பூமிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பின் பரப்பப்பட்டிருக்கலாம் என்கிற ஒரு கருத்தை முன்வைத்திருந்தேன். 'உயிரினத்தை அவ்வாறு நீண்ட உறக்கத்தில் ஆழ்த்தி, பின் உயிருடன் எழுப்ப முடியுமா?' "ஜீவசமாதியில் உறையும் மகான்கள், அவர்கள் விரும்பினால் உயிரோடு எழுவர்", என நம்பும் மக்கள் இதையும் தாராளமாக நம்பலாம். இம்முறை, கோமாவில் இருக்கும் நபர் மீண்டு எழுவதைப் போல் அல்ல. இதன் பெயர், "குளிர்கால உறக்கம்" (Hibernation). (நமது கணினியிலுள்ள 'Hibernate' வசதியை நினைவில் கொள்க)

        இதனை நமது நிகழ்கால உயிரினங்களைக் கொண்டு விளக்கவேண்டுமெனில், நமது பயணத்தை துருவத்தை நோக்கி திருப்ப வேண்டும். துருவப் பகுதிகளில் வாழக்கூடிய 'பனிக்கரடிகள்' அல்லது 'துருவக்கரடிகள்' (Polar Bear), குளிர் காலத்தில் இத்தகைய நிலைக்குத் தயாராகின்றன. (நமக்கு மித வெப்ப காலத்தில்கூட அங்கு குளிர் அதிகம், எனில், நமக்கு குளிர் காலத்தின் போது அங்கு நிலவும் உறையவைக்கும் குளிரை சற்று கற்பனை செய்து பாருங்கள்!) அவைகளோ மாமிச பட்சிணிகள் (Carnivorous), அடிக்கும் குளிருக்கு ஒரு விலங்கும் வளைவிட்டு வெளிவராது. எனவே, அத்தகைய சூழ்நிலையில், குளிர்காலம் முடியும்வரை தொடர்ச்சியான தூக்கத்திற்கு இவ்வகை விலங்கினங்கள் குடும்பம்-குட்டிகளோடு ஆயத்தமாகின்றன.



(பனிக்கரடிகளின் குளிர்கால உறக்கம்)



          "அத்தகைய நீ...ண்...ட உறக்கத்தில் அவை கனவு காணுமா?" வாய்ப்பிருக்கிறது! நாய், எலி,பூனை போன்ற வீட்டு விலங்குகள் கனவு காண்பதை, தற்போதைய விஞ்ஞான உலகம் மெய்ப்பித்திருக்கிறது. வீட்டு விலங்குகளுக்கு வரும்போது, காட்டு விலங்குகளுக்கும் வர வாய்ப்பிருக்கலாம் அல்லவா?


          கனவுகளைப் பற்றி பின்னர்வரும் பதிவுகளில் காண உள்ளதால்,நாம் மீண்டும் வந்தவழி தொடர்வோம். இத்தகைய உறக்கத்தில் வீழும் இவ்வுயிரினங்கள், சரியாக அவ்வுறைபனிக்காலம் முடியும் தருவாயில் துயிலெழுகின்றன. பனிக்கரடியை, இவ்வாறு நீண்ட கால உறக்கத்தில் வீழும் பல உயிரினங்களுக்கு முன்மாதிரியாகவே இங்கு குறிப்பிட்டுள்ளேன். இதே போல 'மோனார்க் வண்ணத்துப்பூச்சி'களும் (Monarch Butterfly) கூட இத்தகைய குளிர்கால உறக்கத்தை அனுபவிக்கின்றன.



         ஆனால் இவை, தனது குடும்பம், குட்டி என பாராமல், திருவிழாக்கூட்டம் போல், காடுகளிலுள்ள ஒவ்வொரு மரத்திலும் இலைகளாக இவற்றை ஓட்டவைத்ததுபோல் தொங்கிக்கொண்டு, தூங்கத்தொடங்குகின்றன. இது ஏறத்தாழ, நம்மூரின் பேருந்துப்பயணம் போல் மிக நெரிசலான இடமாகவே தோன்றுகிறது. இவைகள் மாமிச பட்சிணிகள் இல்லை என்றாலும், இவைகளின் உணவும், வாழும் சூழலும் இவை உயிர் பிழைக்கத் தகுந்தவாறு இல்லாததால், இவைகளும் இத்தகு விந்தையை நிகழ்த்துகின்றன. இங்கு இந்த விஷயம்தான், நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று.


(மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளின் குளிர்கால உறக்கம்)


         மேலும், இவைகளும் பனிக்கரடிகளைப் போலவே, அக்குளிர்காலம் முடிந்ததும், விழிக்கின்றன. இத்தகு பருவநிலை உணர்த்தியை அவற்றுள், அவை சுயநினைவை இழந்த பின்னும் செயல்படும் தருவாயில், உயிர்ப்புடன் இருக்கச் செய்யும் திறன், உண்மையில் அசாத்தியமானது. அதே சமயம், அது மனிதர்களுக்கும் சாத்தியமான ஒன்று. அவைகள் இயற்கையோடு ஒன்றி இருப்பதால், அவற்றால், இப்போதும் மிகச் சிறப்பாக செய்ய முடிகிறது. நாம் இயற்கையை தேவைக்கேற்றாற்போல் மாற்றுவதால், இத்திறன் நம்முள் மழுங்கிவிட்டது. இப்போதும் கூட விடியற்காலையில், கால-உணர்த்தி (Alarm) ஏதுமின்றி, இத்தனை மணிக்கு எழவேண்டுமென எண்ணி உறங்கினால், நிச்சயம் ஏறத்தாழ அச்சமயத்தில், நமக்கு விழிப்பு ஏற்படும். {இவ்வாறு நம்முள் உள்ள இயற்கை உணர்த்தியைப் பற்றி ஆராய ஒரு தனி குழுவே, நமது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இயங்குகிறது (Human Isolation Chamber)}. இவை உறங்கும்போதுமட்டுமல்ல, விழித்திருக்கும்போதும் கூட செயல்படும்.

        இத்தகைய உணர்த்தியின் உச்சநிலை மூலமே, நிலநடுக்கம் முதலிய இயற்கைப் பேரிடர்களை மனிதனைத் தவிர்த்து, பிற உயிரினங்களால் எளிதில் உணர முடிகிறது என்றே தோன்றுகிறது. நாமும் காடுகளில் வாழ்ந்தபோது, இவைகள் நமக்கும் கைவந்தகலையாக இருந்திருக்கும். சரி, நாம் நமது விஷயத்திற்கு வருவோம். உயிரை அவ்வாறு ஆழ்ந்த, மயக்கநிலை போன்றதொரு நிலைக்குக் கொண்டுசெல்ல முடியுமா? அவ்வாறு கொண்டுசென்றாலும் அதே சுயநினைவுடன் மீண்டும் எழுப்ப முடியுமா? இது சாத்தியமாயின், அவ்வுயிரினம், முட்டை பொரிந்து உள்ளிருந்து வெளிவரும் குஞ்சு போல எழலாம்; அல்லது நாமே அவற்றை எழுப்பவும் செய்யலாம். இவை பற்றி எளிதில் விளக்க, ப்ரோமீதியஸ் (Prometheus) படத்தை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.


        அக்கதையில் மனிதர்களையும் ஆழ்நிலை உறக்கத்திற்கு உட்படுத்தி, பலவருடங்கள் கழித்து எழுப்பப்படுவது போல காட்டப்படும். (அவதார் (Avatar) படத்திலும் இத்தகைய காட்சிகள் வரும்) அதேபோல், அதில்வரும் வேற்றுக்கிரக வாசிகளும்கூட பல யுகங்கள் கழித்து எழுப்பப்படுவதுபோல சித்தரிக்கப்பட்டிருக்கும். மேலும், உயிரின் மூலம் ஒரு குடுவையில், உறைநிலையில் பாதுகாக்கப்பட்டிருப்பது போலக் காட்டுவர்.


('ப்ரோமீதியஸ்' படத்தில் காட்டப்படும், மனிதர்களின் உறைநிலை உறக்கக்காட்சி)


('ப்ரோமீதியஸ்' படத்தில் காட்டப்படும், வேற்றுக்கிரகவாசிகளின் உறைநிலை உறக்கக்காட்சி)


(உயிர்மூலக் குடுவை)



('அவதார்' படத்தில் காட்டப்படும், மனிதர்களின் உறைநிலை உறக்கக்காட்சி)

           நான் படத்தைப்பார்த்து கதை சொல்பவன் போல் உங்களில் பலருக்குத் தோன்றலாம். ஆனால், இத்தகைய புனைகதை, தற்போது நிஜக்கதை ஆகியிருக்கிறது. ஆம். NASA தற்போது இத்தகைய ஆய்வுகளில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு அத்தனை முக்கியத்துவம் தர காரணம் என்ன? இதற்கு பதில், மிக சுலபம். நாம் உறக்கத்தில் இருக்கும்போது, நமக்கு பசி எடுப்பதில்லை. காரணம், நமது உடல் பாகங்கள் அப்போது ஓய்வில் இருக்கும். அதேபோல் நமது உடலுறுப்புகளுக்கு விருப்ப ஓய்வு வழங்குவதன்மூலம், நீண்டகாலத்திற்கு பசியின்றி உயிர்வாழ இயலும். நீண்ட தூர விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் விண்வெளி வீரர்களுக்கு, இது உகந்ததாகவும், உதவியாகவும் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.


(விண்வெளித் துயில்நிலை)

          சரி. இவ்வாறு உறங்கச் செய்து மீண்டும் எழுவதற்கான வாய்ப்புகள் உண்டென வைத்துக்கொள்வோம். அவ்வாறு உரைநிலையிலிருந்து உயிர்த்தெழுந்த உயிரினங்கள் ஏதேனும் உண்டா? எனத் தேடும்போது கிடைத்த விஷயம்தான், "FAFROTSKY". 'Falls From The Sky' என்பதன் சுருக்கமே, இந்த 'Fafrotsky'. அதாவது, 'ஆகாயத்திலிருந்து விழும் அசாதாரணமான பொருள்', என்று பொருள். அதென்ன அசாதாரணம்? சாதாரணமாக ஆகாயத்திலிருந்து நீர் மழையாக விழும், இல்லையேல், சமயங்களில் எரிகற்களோ, விண்கற்களோ சற்று அரிதாக விழும். இவற்றைத்தாண்டி, எந்தவொரு பொருள் விழுந்தாலும், அது மேற்கூறிய 'Fafrotsky' வகையில் சேரும்.

         அப்படி என்னதான் வித்தியாசமாக விழுந்திருக்கிறது, என்பதை அடுத்தவாரம் காண்போம். அதற்கு முன், அடுத்த வார தொடரின் பதிவையும், இந்தவார தொடரையும் இணைக்கும் பொருட்டு ஒரு சிறு தகவல்.

         1987, அக்டோபர் 23-ல் பிரிட்டனிலுள்ள கிளவுசெஸ்டர்ஷையர் என்கிற ஊரில் ஆலங்கட்டிமழை பெய்தது. (இது ஒரு அதிசயமா? என்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்) அவ்வாறு பெய்த பனிக்கட்டிகளின் உள்ளே லேசான ரோஸ் நிறத்தில் தவளைகள் இருந்தன. அவ்வளவு உயரத்திலிருந்து மழையாய் பொழிந்தபோதும், அவற்றில் முக்கால்வாசி தவளைகள் உயிரோடிருந்தன; தத்தித் தத்தித் தப்பித்தன, பனி உருகியதும்!

         இதுபோன்ற இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுடன், அடுத்தவாரம் சந்திப்போம்.

அதுவரை நன்றிகளுடன்,
              - அயலான்.



மேலும் விவரங்களுக்கு, காண்க:

http://en.wikipedia.org/wiki/Hibernation
http://en.wikipedia.org/wiki/Polar_bear
http://en.wikipedia.org/wiki/Monarch_butterfly
http://en.wikipedia.org/wiki/Prometheus_(2012_film)
http://en.wikipedia.org/wiki/Avatar_(2009_film)
http://newswatch.nationalgeographic.com/2013/08/21/how-the-alaska-wood-frog-survives-being-frozen/
http://motherboard.vice.com/read/nasa-is-getting-serious-about-space-hibernation


Photo Courtesy : Google.

No comments:

Post a Comment